தமிழகத்தில் டீக்கடைகள் திறக்க அனுமதி.. பார்சல் சேவை மட்டும் உண்டு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளில், புதிய தளர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி டீக்கடைகள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மே 3ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுக்க அமலில் உள்ளது. இருப்பினும் மதுபான கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தமிழகத்திலும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மே 7-ஆம் தேதி முதல் துவங்கப்பட்டன. ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக இன்று முதல் தற்காலிகமாக விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறை.. ஒரு ஏரியா முழுக்க கருஞ்சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.. அதுவும் சென்னையில்
பார்சல் மட்டும்
இந்த நிலையில் மற்றொரு விதிமுறை தளர்வை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீக்கடைகளை திறந்து வைக்கலாம். வரும் 11ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. ஆனால் பார்சல்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர அங்கே, நின்றோ, அமர்ந்தோ, காபி, டீ, பிஸ்கெட், சிற்றுண்டி போன்றவற்றை உட்கொள்ள அனுமதி கிடையாது. நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் டீ கடைகள் உடனடியாக மூடப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு இந்த தளர்வு பொருந்தும்.
காய்கறி கடைகள் நேரம் நீட்டிப்பு
இதேபோல காய்கறி மற்றும் மளிகை கடைகள் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை காய்கறி விற்பனை செய்யலாம். சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட தனிக் கடைகள், காலை 10.30 மணி முதல், மாலை 6 மணி வரை செயல்படும். மற்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தனி கடைகளை திறந்து வைக்கலாம்.
பெட்ரோல் பங்க்
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை காய்கறி, மளிகை கடைகளைத் திறக்கலாம். சென்னை தவிர பிற பகுதிகளுக்கும் இதே காலநேரம் பொருந்தும். சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகளை திறந்து வைக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிற பகுதிகளில், காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, பெட்ரோல் பங்க் திறந்து வைக்கலாம்.
டாஸ்மாக் பிரச்சினை
டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள், டீக்கடைக்கு கூட இன்னும் அனுமதி கொடுக்கவில்லை என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இப்போது டீக்கடைக்கு அனுமதி கொடுத்ததன் மூலம், தமிழக அரசு அந்த விமர்சனங்களை குறைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், டீ, காபி போன்றவற்றை குடிப்பவர்கள் கண்ணாடி கிளாஸ்களை பயன்படுத்தும்போது, அதை கழுவும் ஓட்டல் ஊழியருக்கு பரவக்கூடும். அதன் மூலம், பிறருக்கும் நோய் தாக்கம் ஏற்படக்கூடும். என்னதான், பார்சல் மட்டுமே என கூறினாலும், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு டீக்கடையையும் போலீஸ் போட்டு கண்காணிக்க முடியாது என்பதே யதார்த்தம்.