போனா வராது.. விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர்.. வாங்க.. போராடும் ஆசிரியர்களுக்கு அரசு கவர்ச்சி ஆபர்!
Recommended Video
சென்னை: பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிடமாற்றம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை
தொடர்ந்து 7 நாட்களாக அரசு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால் கல்வியும் அரசு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றும் கொள்ளும்படி தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
எச்சரிக்கை
எனினும் எதற்கு அசராமல் திட்டமிட்டபடி சாலைமறியல், போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்கள் இன்றைய தினத்துக்குள் பணிகளுக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
தீவிரம்
இதை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் சில ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும் பார்த்துவிட்டது. ஆனால் அவர்கள் அசரவில்லை. போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
ஆபர்
ஜாக்டோ ஜியோவுக்கு தமிழக தலைமை செயலக ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து அச்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வும் பொதுத் தேர்வும் நெருங்குவதால் அரசு செய்வதறியாது அவர்களுக்கு ஆசை காட்டும் ஆபர்களை வழங்க முடிவு செய்துள்ளது.
லட்சங்கள்
அதாவது ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக பெரும் அவதிப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது சொந்த ஊருக்கு இடமாற்றம் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுப்பர். எனினும் ஒரு சிலரது ஆசை மட்டுமே நிறைவேறுகிறது. இதற்காக லட்சங்களை கொட்டிக் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
டிரான்ஸ்பர்
இதை மனதில் வைத்துக் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஒரு ஆபரை அரசு வழங்கியுள்ளது. அதன்படி உடனடியாக பணிக்கு திரும்புவோர்களுக்கு அவர்கள் விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் செய்து தரப்படும் என கவர்ச்சிகரமான ஆஃபரை அரசு அளித்துள்ளது. இதை பயன்படுத்தி டிரான்ஸ்பர் பெறுவரா அல்லது போராட்டத்தை தீவிரப்படுத்துவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.