தண்ணீர் தட்டுப்பாடு... கால்நடைகள் மடியும் அபாயம்... தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப உத்தரவு
Recommended Video
சென்னை : கிராமங்களில் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலந்துரைத்துறை அதிகாரிகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தண்ணீர் தட்டுப்பாட்டால் மனிதர்கள் மட்டுமன்றி மாடுகள், ஆடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோடை மழையும் கைவிட்டதால் தங்களது கால்நடைகளை வளர்க்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர்.தற்போது நாளுக்கு நாள் வெளுத்தும் வாங்கும் வெயிலால், மேய்ச்சலுக்கு செல்லும் மாடு, ஆடுகள் தண்ணீருக்காக குளத்திலும், குட்டையிலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரை குடித்து உயிர் வாழக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விலை கொடுத்து தண்ணீர்
அதுமட்டுமின்றி கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு எடை குறைவு ஏற்படுகிறது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாக்க டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலை கொடுத்தும், குளம், குட்டைகளில் தேங்கி கிடைக்கும் நீரை கால்நடைகளுக்கு கொடுத்து வருவதாக கால்நடைவளர்போர் கூறுகின்றனர்.
உயிரிழக்கும் அபாய நிலை
அதே நேரம், தண்ணீரின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, கால்நடைகளை பாதுகாக்க நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமைச்சர் உத்தரவு
இந்தநிலையில், கிராமங்களில் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலந்துரைத்துறை அதிகாரிகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தொட்டிகளில் தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். தண்ணீர் இல்லாத இடங்களுக்கு நீரை கொண்டு செல்ல தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நோய்களால், பாதிக்கப்படும் கால்நடைகளுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான மொபைல் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
இது ஒரு புறம் இருக்க, வனப்பகுதிகளில் இருந்து யானை, மான் உள்ளிட்ட வினவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வரும் சம்பவங்களும், நடந்து வருகிறது. சில வன உயிரினங்கள் வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.