ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு என்னவெல்லாம் செய்கிறது தெரியுமா.. மக்கள் அதிகாரம் குமுறல்
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக மக்கள் அதிகார மையம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு நிர்வாகிகள் சென்னையில், இன்று மாலை கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி இதுதான்:
நான்கரை லட்சம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாக மனு வழங்கியுள்ளனர். பாரதிய ஜனதா மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நிலைப்பாடு எடுத்து போராடியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவிக்கிறார்.
காற்று நச்சு
மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, தூத்துக்குடி மாநகரத்தில் காற்று மாசு மற்றும் நச்சுத்தன்மை குறைந்துள்ளது என்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் மூலமாகத்தான் தூத்துக்குடியில் நச்சு மாசு ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஆதிக்க காலம்
13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது என்பது காலனியாதிக்க காலகட்டத்தில் கூட நடைபெறாத ஒன்று. ஸ்டெர்லைட் ஆலையில் மக்கள் சாப்பிட நெல் விளையவில்லை. தனது உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது வேதாந்தா குழுமம். இதற்கு தமிழக அரசு ஆதரவாக இருக்கத் தேவையில்லை.
தடை விதிப்பு ஏன்?
தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செயல்படுவதாக கூறுகிறது. ஆனால் சென்னையில், திருச்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக அரசு ஏன் தடை விதிக்கவேண்டும்? வாட்ஸ்அப் மூலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மெசேஜ் அனுப்பினால் கூட காவல்துறை சம்மன் அனுப்புகிறது.
கடை உரிமையாளர்
கருப்பு துணி வாங்க ஜவுளி கடைக்கு சென்றால் கூட, ஜவுளி கடை உரிமையாளரை போலீசார் அடித்து இழுத்துச் செல்கிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆட்சிதான் நடைபெறுகிறதா, தமிழக அரசு ஆட்சி நடைபெறுகிறதா? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதில் முன்னணியில் உள்ளவர்களின் பெயர்களை ரவுடி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆட்சி
இதன்மூலம் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பது அம்பலமாகிவிட்டது. அங்கு இந்திய சட்டம் எதுவுமே செயல்பாட்டில் இல்லை. மூடப்பட்டுள்ள காலகட்டத்தில் கூட ஸ்டெர்லைட் ஆலை, மக்கள் மத்தியில் மூளைச்சலவை செய்யும் வேலையிலும், பணம் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளது. இவ்வாறு சரமாரியாக குற்றம்சாட்டினார்கள்.