ஆறுமுகசாமி ஆணையம்.. 4வது முறையாக கால அவகாசம் நீட்டித்த தமிழக அரசு
சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 4வது முறையாக கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.
இந்த ஆணையம் சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவர்கள், அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரிடமும் நடத்தப்பட்ட விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது.
விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனால், ஆணையத்தின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இதன் அடிப்படையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை 4வது முறையாக 4 மாத காலத்துக்கு நீடித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே, காலஅவகாசம் வழங்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அப்போலோ மருத்துவர்கள் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.