ஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது
சென்னை: ஜூன் 8ம் தேதி திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக எந்த மாதிரியான, நிலையான இயக்க நடவடிக்கை (SOP) எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி தமிழக அரசு இன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
உணவகங்களுக்குள் நுழையக்கூடிய ஒவ்வொரு ஊழியர் மற்றும் வாடிக்கையாளர், உடல் வெப்பம் பரிசோதனை செய்வதற்கான தெர்மல் ஸ்கேனிங் வசதி அனைத்து உணவகங்களிலும் இருக்க வேண்டும்.
காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அந்த ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. மருத்துவரை அணுக அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது
கை கழுவும் வசதி
உணவக நுழைவாயிலில் கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அங்கு, சோப்பு, தண்ணீர், மற்றும் கை சானிடைசர் வைத்திருக்க வேண்டும். உணவகங்களுக்குள் நன்கு காற்று வந்து வெளியேறுவதற்கான வசதி செய்து கொடுத்து இருக்க வேண்டும். அனைத்து ஜன்னல்களையும் திறந்து இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி அல்லது ஏர் கூலர் பயன்படுத்த கூடாது.
ஹோட்டலை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
ஒவ்வொரு டைனிங் டேபிளில், கை சானிடைசர் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் உள்ள கழிவறைகளில் 1% ஹைப்போ குளோரைட் (30 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர்) அல்லது 2.5% லைசால் (19 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் லைசால்) பயன்படுத்தி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டும்.
கதவு பிடி, தண்ணீர் குழாய்
இதே மாதிரியான கலவையுடன் கூடிய கிருமி நாசினிகள் கொண்டு, உணவகத்தின் தரைப்பகுதி, லிப்ட் பகுதி, கபோர்டு பகுதி, சமையலறை பகுதி உள்ளிட்டவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். கதவுப்பிடி, லிப்ட் பட்டன்கள், டேபிள் மேல் பகுதி, தண்ணீர் குழாய் திருப்பும் பகுதி உள்ளிட்ட, அடிக்கடி தொடக்கூடிய பகுதிகள், சானிடைசர் மற்றும் கிருமிநாசினி இதில் ஏதாவது ஒன்றை வைத்து அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இடைவெளி அவசியம்
மேலே குறிப்பிட்ட கலவை முறைப்படி டைனிங் டேபிள்கள் மற்றும் நாற்காலிகளை ஒவ்வொரு வாடிக்கையாளர் எழுந்திருத்து சென்ற பிறகும் சுத்தம் செய்யப்படவேண்டும். உணவகம் மற்றும் எலிவேட்டர் ஆகியவற்றின், மொத்த கொள்ளளவில் 50% அளவுக்கான வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி பராமரிக்கப்படும் வகையில் நாற்காலி மற்றும் டேபிள்கள் போடப்படவேண்டும். ஒரு சதுர மீட்டர் அளவுக்கான இடைவெளியுடன் இவை அமைக்கப்பட வேண்டும். எத்தனை வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை உணவாக வாசலில் எழுதி வைக்கவேண்டும். நோ சர்வீஸ் என்ற வாசகம் டைனிங் டேபிள் மீது வைக்கப்படலாம்.
டிஜிட்டல் பணம்
பண பரிமாற்றத்தை குறைத்து கொண்டு ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை, க்யூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் முறைகளைப் பின்பற்றலாம். உள்ளே உட்கார்ந்து சாப்பிடுவதை விடவும், உணவை எடுத்துக் கொண்டு செல்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.
உணவு சப்ளை செய்யும்போது
உணவை வீடுகளுக்கு கொண்டு சப்ளை செய்யும்போது, டெலிவரி பாய் உணவு பொட்டலத்தை வாடிக்கையாளரின் வீட்டுக்கு வெளியில் தான் வைக்க வேண்டும். வாடிக்கையாளரின் கைகளில் உணவை கொடுக்கக்கூடாது. டெலிவரி கொடுக்க செல்லும் முன்பாக, ஓட்டல் ஊழியருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியம். ஹோட்டல் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது கட்டாயம். உணவகத்துக்கு உள்ளே அமர்ந்திருக்கும்போதும் முக கவசம் அணிய வேண்டும். வயது முதிர்ந்த ஊழியர்கள், கர்ப்பிணிகள், பிற நோய்கள் இருக்கக்கூடியவர்களுக்கு, கூடுதலாக பாதுகாப்பு அம்சம் அவசியம்.
உள்ளே, வெளியே
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவகத்தில் தனித்தனி பாதை வசதி இருப்பது நல்லது. அதாவது, உள்ளே வருபவர்கள் ஒரு பாதையிலும், வெளியே செல்பவர்கள் மற்றொரு பாதையையும் பயன்படுத்தலாம். க்யூ வரிசையில் காத்திருக்கும்போது, உள்ளே அமர்ந்திருக்கும்போது என குறைந்தபட்சம், 6 அடி இடைவெளியை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக் கூடிய மெனு கார்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.