வீட்டைக் காலி செய்ய நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு உத்தரவு.. அமைதியாக வெளியேறினார்
Recommended Video
சென்னை: அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார்.
சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது பழுத்த அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார்.
குடியிருப்புவாசிகள்
சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நல்லகண்ணு
அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். அதேபோல அரசிடம் மாற்று வீடு கேட்காமல் நல்லகண்ணுவும் வெளியேறினார்.
கண்டனம்
அங்கிருந்து வெளியேறிய அவர் கே கே நகரில் குடிபெயர்ந்துள்ளார். நல்லகண்ணுவுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அரசியல் கட்சிகள்
மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணுவுக்கு மாற்று இடத்தை தராமல் அரசு வெளியேற்ற உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என கட்சிகள் தெரிவித்துள்ளன. பழ நெடுமாறன், டிடிவி தினகரன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.