கண்ணீரை வரவழைத்த வெங்காயம்.. கண்ணீரை துடைக்க உறுதி ஏற்ற தமிழக அரசு
சென்னை: விண்ணை முட்டும் அளவுக்கு உள்ள வெங்காயத்தின் விலையை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு உறுதி கூறியுள்ளது.
வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகும். ஆனால் அந்த வெங்காயமே இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான் உள்ளது. வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும்.
ஆனால் சில நாட்களாக வெங்காயம் என்ற பேரை கேட்டாலே கண்ணீரை வரவழைக்கிறது. காரணம், அதன் விலையுயர்வுதான். வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 70 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெங்காய உற்பத்தி
வெங்காயத்தை அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தியும் அதன் வரத்தும் குறைந்துவிட்டது.
வெங்காய பதுக்கல்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மத்திய அரசு மற்றும் தனியார் இருப்பில் உள்ள வெங்காயங்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெங்காய பதுக்கலை தடுக்கவும் விலை உயர்வை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெங்காய விலை
ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை 4000 ரூபாயாக விற்கப்படுகிறது. நவராத்திரி காலங்களில் 15 நாட்களுக்கு மஹாளய பட்சத்தை மக்கள் கடைபிடிப்பதால் வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்ளமாட்டார்கள். இதனாலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்
இந்த நிலையில் வெங்காயத்தின் விலையை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறைக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. எங்கும் பதுக்கல் இல்லாமல் பொதுமக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாசிக், ஆந்திரத்திலிருந்து வெங்காய லாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.