ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு? எல்லோருக்கும் தெரியப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர், உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், உட்பட ஏராளமான சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் உள்ளன.
போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு உட்பட ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடி இருக்கும். ஆனால் தனது சொத்துக்களை யார் பராமரிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விபரங்களை தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமலாக்க இயக்குனரகம், தமிழக அரசு ஆகியவையும், ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற உள்ளதால் தமிழ்வளர்ச்சித்துறை ஆகியவையும் ஜெயலலிதாவின் சொத்து குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது, விரைவில் மாநில மக்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.