சென்னையை மட்டும் பார்த்தால் போதாது.. தீயாக பரவும் கொரோனா.. தென் மாவட்டங்களுக்கு உடனடி கவனம் தேவை
சென்னை: தமிழக அரசும், சுகாதாரத்துறையும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முழுக்க கவனம் செலுத்தி வரும் நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதை கட்டுக்குள் கொண்டுவர, அரசு சில முக்கிய நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டியதாக உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் மேலும் 1380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் பிற மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளாகும். தமிழகத்தில் உயிரிழப்பு விதம் 1.28 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா.. பலி 39
சென்னை மட்டுமல்ல
வழக்கம்போல சென்னை, கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது அதிகமாக உள்ளதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், அருகே அமைந்துள்ள திருவள்ளூரில் 156 கேஸ்கள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டில் இன்று 146 கேஸ்கள் பதிவாகியுள்ளன.
பிற மாவட்ட நிலவரம்
மதுரை மாவட்டத்தில் 137 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 110 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 44, கள்ளக்குறிச்சி 37, தேனி 48, தூத்துக்குடி 38, திருச்சி 40, வேலூர் 36, விருதுநகர் 26 என்ற அளவில் இன்றைய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
திருச்சி, தென் மாவட்டங்கள்
ஒரு காலகட்டத்தில் திருச்சியில், கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அங்கு அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தென்மாவட்டங்களில், தூத்துக்குடி, தேனி போன்றவையும் கணிசமான பாதிப்புகளை பதிவு செய்து வருகின்றன. திருநெல்வேலி ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஒருவேளை பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் பாதிப்புகள் அதிகரிக்குமோ என்னவோ தெரியவில்லை. இன்று, நெல்லை மாவட்டத்தில், 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு தளர்வு
மதுரையில் இன்று நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவுவதை பார்த்தால், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், தேனி, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வில் சில கெடுபிடிகள் அவசியம் என்பது தெரிகிறது. இந்த நிலையில்தான் கலெக்டர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது இந்த மாவட்டங்களில் நிலவரம் பற்றி அவர் கேட்டறிவார். அதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Recommended Video
சென்னையில் குவிந்த மருத்துவ குழு
மேலும் பல மாவட்டங்களிலிருந்தும், ஏற்கனவே சென்னைக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு மக்களும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர தொடங்கியுள்ளதால் மருத்துவ பணியாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற தேவை நிலவுகிறது.
தென் மாவட்டங்களின் மருத்துவ வசதி
தற்போது தென் மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கக் கூடிய வசதி இல்லை. மதுரையில் உள்ள சுமார் 7 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி பெற்று உள்ளன. ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள், அரசு மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தென் மாவட்டங்களுக்கு அதிக கவனம்
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி முழுமை அடைந்து விட்டால், கொரோனா நோயாளிகளுக்கு எங்கு வைத்து சிகிச்சை அளிப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே மருத்துவ பணியாளர்கள் சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்ட நிலையில், படுக்கை வசதியும் இல்லாமல், மருத்துவப் பணியாளர்களும் இல்லாமல், தென் மாவட்ட மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களில், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை வழங்குவதற்கான அனுமதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அதிகப்படியாக நியமித்து, கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் கணிசமானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசும், மாவட்ட நிர்வாகங்களும் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.