ஸ்டெர்லைட் ஆலையை மூட மறுக்கும் எடப்பாடி அரசு… பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது .. வைகோ
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. 100வது நாள் போராட்டத்தின் போது நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தன்னார்வ நல அமைப்புகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அது தொடர்பான வழக்கில் ஆலை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவு எடுத்தால் மீண்டும் திறக்க முடியாது. ஆனால் தமிழக அரசு வேண்டுமென்றே வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வழிகளை திறந்து விட்டுள்ளது,
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு இருக்கும் அதிகாரம் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திரும்ப திறக்கும் நடவடிக்கையை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.