நாளைக்கும் அரசு மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால்.. அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை
சென்னை: நாளைக்கும் அரசு மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு தயங்காது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலுயுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிமை (அக்.25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் மருத்துவர்களால் நோயாளிகளை கவனிக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் அறிவித்து இருந்தார்கள்.
ஆண்-பெண்ணுக்கு ஒரே திருமண வயதை நிர்ணயிக்க கோரி வழக்கு.. மத்திய அரசு பதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது
பயிற்சி மருத்துவர்களை கொண்டு அரசு சமாளித்து வந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக அவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள். இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை பரிசீலிப்பு
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலித்து வந்தோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். போராட்டத்தை அரசு மருத்துவர்கள் உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.
ஏற்க முடியாது
நியாயமான, உயர்தர மருத்துவ சேவை ஏழை, எளிய மக்களுக்கு அவசியமானது. அதில் ஏற்படும் தடையை அரசு அனுமதிக்காது. பணிக்கு செல்லக் கூடிய மருத்துவர்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தடுப்பது ஏற்க கூடியது அல்ல. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தேவையான நடவடிக்கை எடுக்கிறது.
மாற்று மருத்துவர்கள்
மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகும் பணிக்கு வராத மருத்துவர்களின் பணியிடங்கள், காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமிக்கப்படுவார்கள்" என்றார்.