விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி
சென்னை: தமிழகத்தில் கெயில் எண்ணெய்க் குழாய் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பதிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தின் போது திமுக உறுப்பினர் சபா ராஜேந்திரன் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கெயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை தடுக்க வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் செயல்படுவதாக குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவர்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி, கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதிபட கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் தமிழகத்தை பொருத்த வரை 312 கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணி கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது.
எண்ணெய் குழாய்கள் பதிக்க தோண்டப்படும் பள்ளம் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர், நிலங்களை சமன் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதே போல புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உடன்பாட்டின் படி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அரசாணையை போல, தமிழகத்திலும் அரசாணை வெளியிட தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.