அமித் ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு.. மோடியையும் சந்திக்க உள்ளார்! தமிழக நிலவரம் பற்றி ஆலோசனை
சென்னை: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், ஜனநாயகத்தின் பொறுப்பாளர் என்று அழைக்கப்படுபவர். அந்த வகையில், மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, மத்திய உள்துறை அமைச்சருக்கும், குடியரசு தலைவருக்கும் ரிப்போர்ட் செய்ய வேண்டிய இடத்தில் உள்ளவர். எனவே, தற்போதைய இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுவாகவே அவ்வப்போது மாநிலத்தில் நிலவும் நிலவரங்களை அறிக்கையாக, குடியரசு தலைவருக்கும், உள்துறை அமைச்சருக்கும், ஆளுநர்கள் அனுப்புவார்கள். ஆனால் சில நேரங்களில்தான் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள். இப்போது பன்வாரிலால் டெல்லிக்கே சென்று, உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார்.
இததையடுத்து அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளின்போது தமிழக நிலவரம் பற்றி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றம் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும், 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.