வாய்மையும், அறமும் இறுதியில் வெல்லும் - தமிழக ஆளுநர் தீபாவளித் திருநாள் வாழ்த்து
ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: வாய்மையும், அறமும் இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளித் திருநாள் எடுத்துக்கூறுகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா காலம் என்றாலும் மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
ஐப்பசி அமாவாசைக்கு முதல்நாள் தீபாவளி பண்டிகையாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. நரகாசூர வதமாக இருந்தாலும் இந்த பண்டிகை நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஒருவருக்கொருவர் பலகாரங்களை பரிமாறிக்கொண்டு வாழ்த்துக்களை கூறிக்கொண்டும் கொண்டாடுவது வழக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் "தீபாவளியையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். வாய்மையும், அறமும் இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளித் திருநாள் எடுத்து இயம்புகிறது . ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.