"முன்னாடி வாங்க".. இபிஎஸ், முருகனிடம் முன் வரிசையில் அமர சொன்ன கனிமொழி.. உண்மையில் என்ன நடந்தது?
சென்னை: நேற்று தமிழ்நாடு ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் 8ம் வரிசையில் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையானது. இது தொடர்பான உண்மையான விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நேற்று ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டார். நாகலாந்து ஆளுநராக இருந்தவர் நேற்று தமிழ்நாடு ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். நேற்று காலை ஆளுநர் மாளிகையில் இதற்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் ஆளும் திமுக தரப்பினர், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜகவில் இருந்த முக்கிய தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் 8ம் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது.
அமரீந்தர்சிங் ராஜினாமாவை தொடர்ந்து பஞ்சாப் புதிய முதல்வராகிறாரா மூத்த காங். தலைவர் அம்பிகா சோனி?
பரபரப்பு
இந்த சம்பவம் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக தலைவர்களுக்கும் 3ம் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. முன்பு அதிமுக பதவி ஏற்பின் போது ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன் வரிசையில் அதிமுகவிற்கு திமுக தரப்பு இடம் கொடுத்தது. முதல்வரின் பதவி ஏற்பு விழாவில் நடந்த இந்த சம்பவம் அரசியல் ரீதியான ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது.
ஆளுநர் பதவி ஏற்பு
ஆனால் நேற்று ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பின் வரிசைக்கு தள்ளப்பட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில்தான் இது தொடர்பாக உண்மையில் நடந்தது என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த விழா அரசு தரப்பில் செய்யப்பட்டது கிடையாது. ஆளுநர் மாளிகைதான் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆளுநர் மாளிகையை சேர்ந்தவர்கள்தான் இட ஒதுக்கீடு செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி 8ம் வரிசை
இதன் காரணமாகவே எதிர்கட்சித் தலைவர்கள், மற்ற எம்எல்ஏக்களுக்கு பின் வரிசை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநர் மாளிகை நிர்வாகி ஒருவர் நேற்று விழா நடக்கும் முன் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் முன் வரிசைக்கு செல்லும்படி கூறியுள்ளார். ஐயா முன்னே சென்று உட்காருங்கள் என்று ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இரண்டு தலைவர்களும் இருக்கட்டும் என்று கூறி பின் வரிசையில் அமர்ந்து உள்ளனர்.
பின் வரிசை
முன் வரிசையில் சில இடங்கள் காலியாக இருந்ததை குறிப்பிட்டு இப்படி அந்த ஊழியர் முன் வரிசைக்கு செல்லும்படி கூறி உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, எல். முருகன் ஆகியோர் தொடர்ந்து பின் வரிசையில் அமர்ந்து இருந்ததை பார்த்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் அருகில் சென்று முன் வரிசைக்கு செல்லும்படி கூறியுள்ளார். எல். முருகனிடம் முதலில் தனியாக சென்று முன் வரிசையில் அமரும்படி கூறி இருக்கிறார்.
ஆனால் அமரவில்லை
அதன்பின் எடப்பாடி பழனிசாமியிடமும் கூறியுள்ளார் . ஆனால் இருவரும் அங்கேயே அமர விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் இருவரும் 8ம் வரிசையிலேயே அமர்ந்த நிலையில் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். கனிமொழி நேற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எல். முருகன் ஆகியோரிடம் பேசிக்கொண்டு இருந்த வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.