ஹோட்டல்களில் ஏசிக்கு அனுமதி.. தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.
கடந்த செப்டம்பர் 1ல் இருந்து தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. இ - பாஸ், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகளுடன் தமிழகத்தில் லாக்டவுன் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் தமிழகம் முழுக்க வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல்.. முதலிடத்தில் ஆந்திரா.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?
ஏசி வசதி
இந்த நிலையில் தமிழகத்தில் உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 முதல் இரவு 8 மணி வரை உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியானது. இதன் காரணமாக ஏசி பயன்படுத்த தடை இருந்தது.
ஆலோசனை
தற்போது இந்த தடை நீக்கப்பட்டு ஏசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அக்.1-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது. ஆனால் திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
யாருடன் ஆலோசனை
திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை எப்படி திறக்கலாம், என்ன மாதிரியான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை செய்யவுள்ளனர். தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரோடும், உரிமையாளர்களோடும் வரும் 8ஆம் தேதி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி அளிக்க வாய்ப்பு
இதில் தியேட்டர் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல் வரும் 14ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இப்படி பரவும் செய்தியில் உண்மையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.