கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை.. வருகிறது சென்னை மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஜாலியாக போகலாம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாகத் தலைநகர் சென்னை இருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் இப்போது ஏற்கனவே பஸ், மின்சார ரயில், மெட்ரோ எனப் பல பொது போக்குவரத்துகள் முறைகள் உள்ளன. இதனால் மக்களின் பயண நேரம் கணிசமாகக் குறைகிறது. குறிப்பாக மெட்ரோ மக்களுக்குப் பெரியளவில் உதவுகிறது.
அரசு நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவது எப்படி? தமிழ்நாடு அரசிடம் பாடம் கற்க வந்த 3 ஆந்திர அமைச்சர்கள்
சென்னை மெட்ரோ
இப்போது சென்னையில் மெட்ரோ இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு வழித்தடம் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடம் என மொத்தம் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் செயல்பட்டு வருகிறது. தினசரி சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பொது போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தகட்ட மெட்ரோ பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.
இரண்டு வழித்தடங்கள்
இரண்டாம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் வர உள்ளது. மாதவரம்-சிறுசேரி வரை 45 கிமீ தூரத்தில் ஒரு வழித்தடம், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிமீ தூரத்தில் மற்றொரு வழித்தடம் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தூரத்தில் வழித்தடம் என மொத்தம் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ வரவுள்ளது.. ரூ.61,843 கோடி செலவில் இந்த புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைய உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இதன் கட்டுமான பணிகள் இப்போது நகரில் பல இடங்களில் நடந்து வருகிறது. வரும் 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் படிப்படியாகப் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இப்போது சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்வோர் கோயம்பேட்டில் இருந்தே செல்ல வேண்டி உள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
ஆர்டிஐ கேள்வி
இப்போது புறநகர் பேருந்து நிலையம் உள்ள கோயம்பேட்டிற்கு எளிதாக மெட்ரோ மூலம் பொதுமக்கள் சென்று திரும்பலாம். ஆனால், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ இல்லாத நிலையில், அங்குப் பயணிகள் செல்வதில் சிரமம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது. இதற்கிடையே மீனம்பாக்கம் விமான நிலைய மெட்ரோவை கிளம்பாக்கம் வரை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பப்பட்டு இருந்து நிலையில், அரசு இதில் பதிலளித்துள்ளது. அதில் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு பதில்
இது குறித்த ஆர்டிஐ கேள்விக்குத் தமிழக அரசு அளித்த பதிலில், "சென்னை ஏர்போர்ட் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கும் திட்டத்திற்குத் தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.. 15 கிமீ தொலைவில் அமையும் இந்த வழித்தடத்தில் 12 உயர்மட்ட ரயில் நிலையங்கள் அமையும். இதற்காக ரூ.4,625 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இதற்கான கட்டுமானங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.