19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு
அமைச்சரவைக் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுவதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே நவம்பர் 2-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அது ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஆலோசனை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், அது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஆழ்துளை கிணறுகள் வரைமுறைபடுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவை முடிவு
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவது பற்றி ஆலோசித்து அந்த விவகாரத்தில் அனுமதி தருவது, சலுகைகள் தருவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலரும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க ரிட்டர்ன்
அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார். திங்கட்கிழமை அன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிடப்பட்டதாம். ஆனால் ஓ.பி.எஸ். வெளிநாட்டில் இருந்து வர வேண்டும் என்பதால் ஒரு நாள் தள்ளி வைத்து செவ்வாய்கிழமை கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாம்.