நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்... தமிழக பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் தமிழக பட்ஜெட், கொரொனோ வைரஸ் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
2020-2021-ம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் சேர்க்கவேண்டிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2020-ம் ஆண்டின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி தருவது பற்றி முடிவெடுக்கப்பட்டு சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நாளை நடக்கும் கூட்டத்திற்கு பிறகும் முக்கிய அறிவுப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பான ஆலோசனை நாளை நடக்க வாய்ப்புள்ளது. முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து நாளை கலந்தாலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றி நாளைய தினம் இறுதி முடிவு எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி.. ஆதாரம் இருக்கு.. பிரகாஷ் ஜவடேகர் பகீர் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பள்ளி முழு ஆண்டு விடுமுறையின் போது நடத்துவதா அல்லது அதற்கு முன்னரே நடத்தி முடிப்பதா என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது. மேலும், அமைச்சர்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் பற்றியும், சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாகவும் நாளை விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.