நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.
2020-2021-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் கூட்டம்
2020-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் அதில் எடுக்கப்பட கூடிய முடிவுகள் பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பற்றி நாளை ஆலோசிக்கப்பட உள்ளது. முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் நாளை கலந்தாலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அனுமதி
மேலும், தொழிற் நிறுவனங்களுக்கு அனுமதி, நிலங்கள், மானியங்கள் வழங்குவது பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரும் பங்கேற்க உள்ளார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது. மொத்தத்தில் இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.