சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது மக்களின் வரவேற்பு அற்புதமாகவும் உற்சாகவும் இருந்தது. இது நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது.
பல்வேறு இடைஞ்சல்கள் இருந்தாலும் மக்கள் சாரை சாரை வந்து ஆதரவு தந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
3 எம்.எல்.ஏ.க்கள் மீதான சபாநாயகர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தனது கடமை செய்து உள்ளது. ஆனால் தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை செய்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
இதுவும் ஒரு வகையான விளையாட்டாக தான் பார்க்கிறேன். ஒருவர் தடையை கோராமல் இருவர் சென்று தடை கோருவது விளையாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து மாணவர்கள் வந்து சீட் பெறும் போது டெல்லி மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.
யூனியன் பிரதேசமாக உள்ளதால் மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டு இருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிற யாரும் கெஜ்ரிவால் உள்பட யாரும் பேசியிருக்க மாட்டார்கள். அப்படி பேசியிருந்தால் அது தவறு தான்.
சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுபாட்டை போக்க அரசு முன் ஏற்பாடு நடவடிக்கை எடுத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அரசு முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்பது தான் நீர்நிலை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தமிழிசை பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது. இப்போது விவாதம் செய்ய வேண்டியதில்லை.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.