சூப்பர்..! நகை கடன் மோசடி.. அதிமுக்கிய நடவடிக்கையை தொடங்கிய தமிழக அரசு.. சிக்கும் முக்கிய புள்ளிகள்?
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் மோசடி நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து ஆய்வு செய்யத் தமிழக அரசு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
குறிப்பாக நாமக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடைபெற்றதும் தெரிய வந்ததது. இது தொடர்பாக 10 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு
இந்நிலையில் நகைக் கடன் விவகாரத்தில் நடைபெற்றுள்ள மோசடி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கத் தமிழ்நாடு அரசு தனியாகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நடை கடன் முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்யும் இந்த குழு வரும் நவம்பர் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசின் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
5 சவரன் நகை
அதில், ஏராளமான முறைகேடுகள் இருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டு உள்ளது. 5 சவரனுக்கு மட்டும் அல்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கூட்டுறவு சார் பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
நவம். 21க்குள் அறிக்கை
இந்த குழு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட 100 சதவீதம் நகைக்கடன்களை ஆய்வு செய்யும். சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவ.,21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துக் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது, அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பயனடைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பிலும் இதேபோன்ற முறைகேடுகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.