அவசரம்.. ''கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் கொடுங்க'' .. மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்!
சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
கொரோனா மரணங்கள்- யாரும் தடுக்க முடியாது;வயதானால் சாகத்தான் வேண்டும்: ம.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
கொடி கட்டி பறக்கும் கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா நாடு முழுவதும் பரவி வருவதால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்கிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் தட்டுப்பாடு
கொரோனாவை விரட்டியடிக்க 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள் போடப்படுவதை ஊக்குவிக்கும் விதமாக நாட்டில் கடந்த 11-ம் தேதி முதல் நான்கு நாட்கள் தடுப்பூசி திருவிழாவாக கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசிகள் தட்டுப்பாடு உள்ளதாக மத்திய அரசிடம் தெரிவித்தது.
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்திலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வந்தன. பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஆனால் தமிழகத்தில் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாகவும், மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
20 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்
இந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதாவது தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.