மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது- ஆளுநர் உரையில் தமிழக அரசு வலியுறுத்தல்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என ஆளுநர் உரையில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.
அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை இல்லை; 7 தமிழர் விடுதலையில் முடிவு எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். நடப்பு கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்கள்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. கர்நாடகாவின் இந்த திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.
பெரியாறு ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டவும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையில் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி- தென்வெள்ளாறு நதிகள் இணைக்கப்படும்.
கோவையில் ரூ1,620 கோடி மதிப்பில் கோல்டுவின்ஸ்-உப்பிபாலையம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். பூம்புகார், தேங்காய்பட்டினம், மூக்கையூரில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் தெரிவிக்கப்பட்டது.