10.5% வன்னியர் இட ஒதுக்கீடு.. காலியாக உள்ள இடங்களை.. இதர பிரிவினரை கொண்டு நிரப்ப தமிழக அரசு அனுமதி
சென்னை: நடப்பு கல்வியாண்டில் எம்பிசி பிரிவில் புதிய முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் சூழலில் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியான இடங்கள் இருந்தால் அவற்றைச் சுழற்சி முறையில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினரைக் கொண்டு நிரப்ப உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே போராட்டங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திமுக ஆட்சியில் வன்னியர்கள் உட்பட பல்வேறு சமூகத்தினரை ஒன்றாகச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குத் தனியாக 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
'திருமணத்தை பயன்படுத்தி கட்டாய மதமாற்றம் பண்றாங்க..' லவ் ஜிகாத் சட்டம் குறித்து உபி அரசு விளக்கம்
வன்னியர் இட ஒதுக்கீடு
இருப்பினும் இந்த இட ஒதுக்கீட்டின் முழுமையான பலன் வன்னியர் சமூகத்தினருக்குக் கிடைக்கவில்லை என்று பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், இந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களுக்கு போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை என்றும் பாமக தொடர்ந்து கூறி வந்தது. மேலும், எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு என உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக சார்பில் மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
புதிய சட்டம்
இதையடுத்து தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். மேலும், இது தொடர்பாகக் கடந்த ஜூலை மாதம் அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
தமிழக அரசு அனுமதி
அதில் நடப்பு ஆண்டு முதலே இந்தப் புதிய சிறப்பு ஒதுக்கீடு முறையில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் சேர்க்கை நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது தனிக்கதை! இந்தச் சூழலில் உள் ஒதுக்கீட்டில் ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்ற பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
சுழற்சி முறை
அதாவது வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். தென்மாவட்டங்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டில் வரும் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அவற்றைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசிதழ் வெளியீடு
அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, சீர் மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருந்தால், அதை வன்னியர்களைக் கொண்டு நிரப்பிட ஏதுவாகவும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் திருத்தம் செய்து அரசிதழும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.