பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை!
சென்னை: ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கக்கோரி கடிதம் எழுதியது. இதனை நிதிநிலையை காரணம் காட்டி பல மாநிலங்கள் மறுப்பு தெரிவித்து விட்டன.
ஆனால் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஒரு சில மாவட்டங்களில் இத்திட்டதை நிறைவேற்றி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது.
பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எனவே சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள்.
தற்போது காய்கறிகள் மற்றும் முட்டையுடன் சேர்த்து 13 வகையான உணவு வகைகள் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பால் கெட்டு போகாமல் சேமிக்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் வசதியில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அதற்கான வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி தேவை என தெரிவித்துள்ளனர்.