இ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் நபர்கள் கட்டாயமாக இ பாஸ் பெற விண்ணப்பித்து இருக்க வேண்டும், அதேபோல் கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுக்க பெரு நகரங்களில் வரும் திங்கள் கிழமை விமான சேவை தொடங்குகிறது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்க உள்ளது. இதற்கான புக்கிங் தொடங்கிவிட்டது.
சென்னைக்கும் விமான சேவைக்கான புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் மே 31 வரை விமான சேவையை தொடங்க கூடாது என்று தமிழக அரசு கூறி இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசு மத்திய விமான போக்குவரத்து துறைக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.
நாளை தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்துச் செய்தி
என்ன திருப்பம்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வரும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் நபர்கள் கட்டாயமாக இ பாஸ் பெற விண்ணப்பித்து இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தனிமை கட்டாயம்
அதேபோல் கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் வரும் பயணிகள் தங்கள் விவரங்களை TNePass தளத்தில் பதிவு செய்ய வேண்டும். எல்லோரும் இந்த தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். விமானம் மட்டும் இன்றி ரயில் மூலம் வரும் நபர்களும் தங்கள் விவரங்களை இதில் பதிவிட வேண்டும்.
உறுதி அளிக்க வேண்டும்
இந்த தளத்தில் விண்ணப்பிக்கும் சமயத்தில் முக்கியமான விவரங்களை மக்கள் அளிக்க வேண்டும். அதன்படி இவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் எங்கும் வசிக்க போவதில்லை என்று உறுதி அளிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் எதுவும் இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும். வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் விமானம் மூலம் தமிழகம் வரவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும்.
கொரோனா அறிகுறி
கொரோனா அறிகுறி இருந்தால் உடனே அரசை தொடர்பு கொள்வேன் என்று இவர்கள் உறுதி அளிக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக தனக்கு கொரோனா இல்லை என்பதை பயணிகள் உறுதி செய்ய வேண்டும். சரியாக தொடர்பு எண்கள் விலாசத்தை இவர்கள் அந்த தளத்தில் அளிக்க வேண்டும். குடும்பமாக விமான பயணம் மேற்கொண்டால், எல்லோரின் விவரமும் இதில் அளிக்கப்பட வேண்டும்.
இ பாஸ் எப்படி
விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இவர்களுக்கு க்யூ ஆர் கோட் மூலம் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும். போர்டிங் பாஸ் பெறுவதற்கு முன் தமிழகத்திற்கு இ என்ட்ரி பாஸ் பெற விண்ணப்பித்து இருக்க வேண்டும். வாடகை வாகனம் அல்லது சொந்த வாகனம் மூலம் இவர்கள் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லலாம். ஆனால் இந்த எண்ணை இ பாஸ் தளத்தில் அளிக்க வேண்டும்.
அவசியம் தேவை
இ பாஸ் இல்லாத நபர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாது. உடனடியாக இ பாஸ் விண்ணப்பிக்க விமான நிலையத்தில் டெஸ்க் அமைக்கப்பட்டு உள்ளது . இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கவனிப்பார்கள். கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறி உள்ள நபர்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
Recommended Video
சேவை தொடங்குமா?
வீட்டில் தனிமையில் இருக்க முடியாத நபர்கள் அரசின் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள். முகாம் தனிமைக்கு விண்ணப்பித்த நபர்கள், முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக இ பாஸ் தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் காரணமாக நாளை சென்னையில் விமான போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.