தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சென்னைக்காக தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில, தண்ணீர் பற்றாக்குறையை கண்காணித்து நிவர்த்தி செய்வதறக்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். இந்த உயர்அதிகாரிகள் குழு மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை கண்காணித்து, பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்றார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் பஞ்சம் தலைவிரிந்தாடுகிறது.குறிப்பாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக காணப்படுகிறது. எவ்வளவு காசு கொடுத்தாவது தண்ணீர் வாங்கலாம் என மக்கள் ஆர்வம் காட்டினாலும் தண்ணீர் தான் கிடைத்தபாடில்லை.
சென்னையில் குடிநீர் இல்லாத காரணத்தால் ஓட்டல்கள் மதிய வேளைகளில் மூடப்படுகின்றன. சில ஐடி நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி வீட்டில் இருந்தே ஊழியர்களை வேலை செய்ய சொல்லி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் என்ற அளவுக்கு விற்கப்படுகிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் மாதம் 2000 ரூபாய் வரை செலவு செய்து வருகிறார்கள் இருந்தபோதிலும் தண்ணீர் பிரச்னையில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை.
தட்டுப்பாடு என்பது வதந்தி
இந்நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்வது எப்படி என்பது குறித்தும், என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி கிளப்பி உள்ளனர். அதில் உண்மையில்லை. வீண் வதந்திகளை நம்பி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம். தமிழகத்தில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
9 ஆயிரம் நடைகள் லாரி
சென்னையில் நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் கனஅடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் நடைகள் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகிறது. அதை 10 ஆயிரம் நடையாக அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் எந்த ஓட்டலும் மூடப்படவில்லை
சென்னையில் குழு
சென்னையில் குடிநீர் விநியோக பணிகளை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு கண்காணிப்பு பொறியாளர், ஒரு செயற்பொறியாளர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 3 மண்டலங்களை ஒரு தலைமை பொறியாளர் கண்காணிப்பார். ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து சீராக குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இலவச தொலைப்பேசி எண்
சென்னயில் உள்ள 200 வார்டுகளில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் பணிமனை பொறியாளர்களை கண்காணிக்க கைசால் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் அவர்கள் கள ஆய்வு செய்யும் இடம் நேரம் போன்றவை கண்காணிக்கப்படும். குடிநீர் புகாரை பெற 24 மணி நேரமும் செயல்படும் தொலைப்பேசி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 044-45674567 என்ற தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதேபால் பகுதி வாரியாகவும் இலவச தொலைப்பேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்காக செயலி
குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.தினமும் காலை மாலை வேளைகளில் ஆய்வு நடத்த வேண்டும். ஏழைகள் அதிகமாக வசிக்கும் குடிசைப்பகுதிகளில் அவர்கள் அதிக கவனம் செலுத்தி முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். சென்னையைப்போன்று மற்ற நகரங்களிலும் குடிநீர் விநியோகம் செய்ய செயலியை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.