தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து பீலா ராஜேஷ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பாதிப்பு உறுதியான 74 பேரில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் 73 பேர் ஆகும். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் இப்படி வேகமாக கொரோனா பரவுவது குறித்து விசாரிக்க தேசிய தொற்றுநோய் இன்ஸ்டியூட் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.
விழுப்புரம் மற்றும் தேனியில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் தேனியில் உயிரிழந்த பெண்மணியின் கணவர் மற்றும் மகன் இருவரும் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள். அவர்கள் மூலமாக இந்த பெண்மணிக்கும் நோய் பரவியது.
இந்த நோய் எப்படி எப்படி மாறுகிறது என்பதை கணிப்பது கஷ்டம். எனவேதான் வீட்டிலேயே இருங்கள் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
ஏற்கனவே மதுரையில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது.
போடியை சேர்ந்த 53 வயது பெண்மணி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று பலியாகியுள்ளார். முன்னதாக, இன்று காலை சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட் 19 பாசிட்டிவில் 52 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு இவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என.
ஒரே நாளில் கொரோனாவுக்கு தமிழகத்தில் 2 பேர் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருப்பதை அரசு புள்ளி விவரங்களே உறுதி செய்துள்ளன.