தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான்? எந்த வகை வந்தாலும் தடுக்க ஒரே வழிதான்! ராதாகிருஷ்ணன் பளீச்
சென்னை: ஓமிக்ரான் கொரோனா வகையில் புதிதாக BA.2 ஸ்டெல்த் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த வகை ஓமிக்ரான் தமிழ்நாட்டில் உள்ளதா என்பது குறித்து மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த நவ. மாத இறுதியில் கண்டறியப்பட்ட புதிய ஓமிக்ரான் கொரோனா உலகின் கொரோனா பரவல் நிலைமையை அப்படியே மாற்றிப் போட்டது.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்போது ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதால் பல நாடுகளும் ஊரடங்கிற்கு இணையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன,
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? கமல் கேள்வி
புதிய வேரியண்ட்
இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. BA.2 அல்லது stealth Omicron எனப்படும் இந்த உருமாறிய கொரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஓமிக்ரானை போல இல்லை என்பதால் இதைக் கண்டறிவது சிரமமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ன வித்தியாசம்
ஓமிக்ரானின் BA.1 மற்றும் BA.2 என இரண்டிலும் 32 ஸ்டிரெயின்கல் உள்ளன. இருப்பினும், BA.2இல் கூடுதலாக 28 ஸ்டிரெயின்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, பொதுவாக BA.1 வகையில் ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்காது. இதனால் ஓமிக்ரான் பாதிப்பை எளிதாகக் கண்டறியலாம். ஆனால், இந்த BA.2 ஓமிக்ரானில் டெல்டா கொரோனாவை போல எஸ் ஜீன் உள்ளதால் இதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,
இந்தியாவில்
இந்த BA.2 வகை ஓமிக்ரானை ஆய்வாளர்கள் ஸ்டெல்த் ஓமிக்ரான் என அழைக்கிறார்கள். இது ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓமிக்ரான் வைரசே வேகமாகப் பரவும் நிலையில், இது அதை விட வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த BA.2 ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் விளக்கம்
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "ஓமிக்ரன் புதிய வகையான வைரஸ் எல்லாம் இல்லை. அது ஒரு வகையான கொரோனா வைரஸ் தான். அதேபோலத் தான் இப்போது பரவும் ஓமிக்ரானின் இரண்டு வகை உள்ளது. அதில் ஒரு வகை தான் BA.2. இந்த BA.2 வகையிலான ஓமிக்ரான் வேகமாகப் பரவும் திறன் கொண்டது. இருப்பினும், இதுவும் தீவிர பாதிப்பை பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை. இதைத் தான் லண்டன் ஆய்வாளரும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஸ்டெல்த் ஓமிக்ரான்
இது இந்தியாவில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்படும் போது, மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துகள் இருக்கும் போது, இந்த வகை கொரோனா தமிழ்நாட்டிலும் பரவுவது இயல்பானது தான். எல்லா வகையான வைரஸ்களும் உருமாறுவது இயல்பான ஒன்று தான். எனவே, நாம் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. கொரோனா வைரசைப் பொறுத்தவரை அது உருமாறும் போது, வைரஸ் பரவும் வேகம், பாதிப்பு தன்மை மாறுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியைத் தாண்டியும் பரவும்
ஓமிக்ரான் கொரோனாவை பொறுத்தவரை அது வேகமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாண்டியும் பரவும் திறன் கொண்டிருந்தது. ஆனால், அது பெரும்பாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. பெரும்பாலும், ஓமிக்ரான் கொரோனா நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், டெல்டா கொரோனா இன்னும் கூட மக்களிடையே உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரே வழி
டெல்டா தொடங்கி எந்த உருமாறிய கொரோனா பரவல் ஏற்பட்டாலும் மாறாமல் இருப்பது ஒன்று தான். பொதுமக்கள் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடித்தால் எந்த வகையான உருமாறிய கொரோனாவையும் எளிதாக வீழ்த்தலாம்" என்று அவர் தெரிவித்தார்.