ஆதாரம் இருக்கா.. இப்படி பேசாதீர்கள்.. மனசு வலிக்கிறது.. விஜயபாஸ்கர் உருக்கமான பேட்டி
சென்னை: ஆதாரம் இல்லாமல் இப்படி பேசாதீர்கள்.. இது மன வலியை கொடுக்கிறது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் இன்று வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் பாதிப்பு அளவுகளை தெரிவித்துவிட்டு வேறு சில விஷயங்களையும், பகிர்ந்து கொண்டார்.
விஜயபாஸ்கர் கூறியதை பாருங்கள்: இந்திய அளவிலேயே மீடியாக்களுக்கு கொடுக்கக்கூடிய தகவலை மிக வெளிப்படையாக, விதிமுறைகளுக்கு உட்பட்டு கொடுக்கக்கூடியது தமிழக அரசு மட்டும்தான்.
அடேங்கப்பா... கிடுகிடு ஏற்றம்.. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா.. சென்னை நிலை படு மோசம்
வெளிப்படை
இதை ஐசிஎம்ஆர், மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பும் பாராட்டியுள்ளது. தொடர்ந்து பொதுமக்களுக்கு வெளிப்படையான உண்மைகளை கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், சிலர், தொலைக்காட்சி விவாத மேடைகளில் பேசும்போது, அரசு சில புள்ளிவிவரங்களை மறைக்கின்றது என்று கூறுகிறார்கள். பலி எண்ணிக்கையை குறைத்து சொல்கிறோம், பரிசோதனை எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கிறது என்று பேசுகிறார்கள். ஆனால் அது போல எந்த ஒரு மோசடியும் அரசு செய்யவில்லை.
ஐடி நம்பர் உள்ளது
ஒவ்வொரு பரிசோதனைக்கும் ஐடி நம்பர் இருக்கிறது. மத்திய அரசின் போர்ட்டலில் நாம் அப்லோட் செய்கிறோம். எனவே பாசிட்டிவ் இருந்தால் பாசிட்டிவ், நெகட்டிவ் இருந்தால் நெகட்டிவ் என்று வெளிப்படையாகவே நாம் கூறி விடுகிறோம். எனவேதான், மத்திய அரசு நம்மை பாராட்டுகிறது. எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறோம். பத்திரிக்கைகள் இதுபோன்ற குற்றச்சாட்டை, ஆதாரத்தோடு சொல்லவேண்டும். புள்ளி விவரத்தோடு சொல்லவேண்டும். ஆதாரம் இல்லாமல் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல கூடாது.
ஊக்கம் கொடுங்கள்
கொரோனா போன்ற ஒரு நோய் பேரிடர் காலத்தில், ஒரு அவசரக் காலத்தில் இப்படி ஒரு கருத்தை கூறுவது சரியல்ல. 24 மணிநேர அடிப்படையில், அரசு இயந்திரம், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
வைரஸ் அறை
வைரஸ் தாக்க வாய்ப்புள்ள அறைக்குள் இரவு முழுக்க பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் நமது ஊழியர்கள். நீங்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அச்சுறுத்தலான ஒரு இடத்தில் தூக்கமின்றி அவர்கள் இப்படி ஒரு பணியை செய்து வருகிறார்கள். எனவே இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் போது அவர்களின் மனது புண்படுவதாக கூறுகிறார்கள்.
ஆக்கப்பூர்வ கருத்து
ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறுங்கள் அதை ஏற்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வைரசுக்கு எதிராக ஆளுக்கு ஒரு கருத்தைக் கூறுவது சரியல்ல. பொதுமக்கள் நலனுக்காக இதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி நாம் அனைவரும் சொல்லவேண்டும் களத்தில் நின்று பணியாற்ற வேண்டும். பணியாற்றுபவர்கள் மனது சோர்வடைந்து விடக்கூடாது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.