Tamil Nadu Weather: வெயிலூராக மாறிய வேலூர்.. தாளித்த தருமபுரி.. தமிழகத்தின் இன்றைய வெயில் நிலவரம்
சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கடும் வெயில் வறுத்தெடுத்து உள்ளது. வேலூர் மற்றும் தர்மபுரி நகரங்களில் செஞ்சுரி அடித்து உள்ளது கோடை வெயில்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி துவங்கி விளாசி வருகிறது. வரும் 28ம் தேதி வரை கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயில் நீடிக்கும். இருப்பினும் ஒரு ஆறுதலாக அவ்வப்போது சில மாவட்டங்களில், கோடை மழை பெய்து வந்தது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேநேரம், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அனல் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனல் காற்று காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, பொதுமக்கள், காலை 11.30 மணி முதல் பிற்பகல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பூட்டிய வீட்டில் அழுகிய பிணங்கள்.. வீசிய துர்நாற்றம்.. வயதான தம்பதி சடலங்களாக மீட்பு.. சென்னையில்!
இந்த நிலையில்தான், வேலூரில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதாவது 41.6 செல்சியஸ். இதனால் மக்கள் அவதிப்பட்டனர். தருமபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட் (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது. ஆனால், அருகேயுள்ள, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் போன்ற பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் மேகமூட்டம் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.