இந்து இல்லையா? சேர, சோழ, பாண்டிய நாடு இணைந்தே தமிழ்நாடு.. அதையும் இல்லை என்பீர்களா? இயக்குநர் பேரரசு
சென்னை: சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என பிரிந்து கிடந்த நாடுகள் இணைந்துதான் தமிழ்நாடு உருவானதாகவும் இந்து இல்லை என்பவர்கள் அதையும் இல்லை என்பார்களா என இயக்குநர் பேரரசு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.
சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்." என்று கூறினார்.
இந்து இல்லாம, ராஜராஜ சோழன் முஸ்லிமா,கிறிஸ்தவரா? வெற்றிமாறன் எப்படி சொல்லலாம் -இயக்குநர் பேரரசு கோபம்
இயக்குநர் பேரரசு
வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு, "எந்த மேடையிலும் இந்து மக்களை இழிவுபடுத்துவதையே வேலையாக வைத்துள்ளனர். வேறு வேலையே இல்லையா? இந்து சாமியை இழிவுபடுத்துபவர்களுக்கு பதில் சொன்னால் மதவெறியர் என்கிறார்கள்.
தமிழ்நாடு இல்லையா?
ராஜராஜசோழனை இந்துவாக மாற்றிவிட்டார்கள் என வெற்றிமாறன் கூறுகிறார். அப்படியென்றால் அவர் என்ன கிறிஸ்தவரா? இல்லை இஸ்லாமியரா? ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டபோது இந்தியா மாகாணமாக இருந்தது. அதையெல்லாம் ஒன்றிணைத்து இந்தியா என்கிறார்கள். நாமெல்லாம் இந்திய குடிமக்கள்தானே. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதானே இருந்தது. அதை சேர்த்துதானே தமிழ்நாடு என்கிறோம். அப்படியென்றால் தமிழ்நாடே இல்லை என்பீர்களா?
பல மதங்கள்
அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.
நாத்திகம்
நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை. 100% நாத்திகர் என்றால் எல்லா தெய்வங்களையும் இல்லை என்று சொல்ல வேண்டும். போலி சாமியார்களைவிட மோசமானவர்கள் போலி நாத்திகர்கள். போலி நாத்திகர்களால் நாட்டுக்கு நாசம். சேர நாடு, சோழ நாடு என்று எல்லாம் மாகாணமாகவே இருந்தது. அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு என்று அறிவித்தார்கள். அதேபோல் மதங்களை இணைத்து இந்து மதம் என்று அறிவித்தார்கள். கோயிலுக்கு வராதவர்களுக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை.
ஆங்கிலேயர்
கலைஞர் கருணாநிதியின் உண்மைபெயர் தட்சிணாமூர்த்தி. இன்று அவரை கருணாநிதி என்று அழைக்கக்கூடாது என்று சொல்வீர்களா? சில விசயங்கள் மாறும். பிரிக்கப்படும். சேர்க்கப்படும். அதுதான் உண்மை. அதேபோல் ஆங்கிலேயர்கள் இந்திய மதங்களை இணைந்து இந்து என பெயர் வைத்தார்கள். இப்போது பிரிக்கிறார்கள். ஆங்கிலேயருக்கு இந்த நல்ல நோக்கம் உங்களுக்கு இல்லை." என்றார்.