தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் விகிதம்.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?
சென்னை: தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் உயர வாய்ப்புள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கூட தாண்டியது.
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
இதனால் நிலைமை கையை மீறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் தளர்வுகளில் இல்லாமல் இருந்த ஊரடங்கில், பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. சுமார் 68 நாட்களாகத் தமிழ்நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் ஒரே இடத்தில் ஒன்றுகூடத் தொடங்கியதால், கடந்த 4 நாட்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
மீண்டும் கட்டுப்பாடுகள்
இதனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட அரசு இயந்திரம், மீண்டும் நிலைமை கையை மீறிச் செல்லும் வரை காத்திருக்காமல் உடனடியாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து. தலைநகர் சென்னையில் தியாகராய நகர் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 9 பகுதிகளில் வணிக வளாகங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மாநிலத்திலுள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஆக்டிவ் கேஸ்கள்
இந்த கட்டுப்பாடுகளுக்குப் பலன் தரும் வகையில், நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று வைரஸ் பாதிப்பு மீண்டும் குறைந்துள்ளது. அதேநேரம் மறுபுறம் ஆக்டிவ் கேஸ்கள் குறையும் வேகம் 0.9% ஆக உள்ளது. இப்போது வரை ஆக்டிவ் கேஸ்கள் மாறும் விகிதம் எண்ணிக்கை நெகடிவ் ஆகவே இருந்தாலும்கூட அது மீண்டும் பாசிட்டிவ் ஆக வாய்ப்புகள் அதிகம் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வைரஸ் பாதிப்பு
நேற்று 1990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சற்றே குறைந்து 1957 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 20,524ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 20,385ஆகக் குறைந்துள்ளது. கோவை, ஈரோடு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.3% ஆக உள்ளது.