விஸ்வரூபமெடுக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டம்.. ஆதரவு கரம் நீட்டிய நீதித்துறை ஊழியர்கள் சங்கம்!
கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட போவதாக தமிழ்நாடு நீதித்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: கடந்த சில நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட போவதாக தமிழ்நாடு நீதித்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் கோரிக்கைகள் இதுவரை ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுபெற்றுக்கொண்டே செல்கிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். ஆனால் சிறிய சிறிய போராட்டங்களாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது பெரிதாகி உள்ளது.
ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. இதுதான் ஆசிரியர்களை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஆதரவு கரம்
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட போவதாக தமிழ்நாடு நீதித்துறை சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கு ஆதரவாக நீதித்துறை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று தொடங்கும்
இன்று இது குறித்த கடிதத்தை முதன்மை மாவட்ட நீதிபதியிடம் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் வழங்கிட உள்ளார். அதன்பின் இன்று மாலை சாவிகளை ஒப்படைத்து வெளியேறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளையில் இருந்து நீதித்துறை தொடர்பான பணிகள் எல்லாம் முடங்கும் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.
பெரிது
ஆசிரியர்களின் கைதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை, தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது அதிக கவனத்தை பெற்றுள்ளது.