4 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத்தொடர்... ஜன.9-ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை வரும் 9-ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நாளை நிறைவேற்றப்பட உள்ளது.
கூண்டோடு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்... ஆளுநர் உரையை புறக்கணிக்க என்ன காரணம்?
அலுவல் ஆய்வு
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் பான்வாரி லால் புரோகித் உரையுடன் இன்று காலை தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேர ஆளுநர் உரைக்கு பின்பு இன்றைய கூட்டம் முடித்துவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஜனவரி 9 வரை
அதில் வரும் 9-ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும், அதைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நடைபெறவுள்ளது.
துரைமுருகன்
சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு கொறடா ராஜேந்திரன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் பண்டிகை
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குறைந்தது 10 நாட்களாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 மட்டுமே நடைபெறுகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வருவதால் அதற்கு முன்னரே கூட்டம் முடித்து வைக்கப்படுகிறது.