என்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் யாருமே இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில்தான், இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் சீக்கிரமே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில், டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது