தமிழகத்தில் நவ. 30 வரை ஊரடங்கு.. 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி
சென்னை: தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு,ம் நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கான தடை தொடரும்
கல்லூரிகள்
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
கோயம்பேடு வணிக வளாகம்
கோயம்பேடு வணிக வளாகம்: தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2-ஆம் தேதி முதலும் பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவம்பர் 16-ஆம் தேதி முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
ரயில் போக்குவரத்து
பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சின்னத்திரை உள்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளைத் திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்படவுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
100 பேர்
மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
பெரிய அரங்குகள்
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 10-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள்
ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1-ஆம் தேதி முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்கலாம்.
அரசாணை
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
தொடர்ந்து தடை
- நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
- வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி தவிர) தமிழகம் வருவோர்களுக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ பதிவு (E Registration) முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
விழிப்புணர்வு தேவை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பொது இடங்களில் முகக் கவசம்
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், வெளியிடங்களுக்கு முகக் கவசத்தை அணிந்து சென்றும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்தும் அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
கோவிட் தடுப்பு நடவடிக்கை
எனவே பொதுமக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும் நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.