ஊரடங்கில் மேலும் தளர்வுகள்.. பள்ளிகள், தியேட்டர் திறப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில், மேலும் பல தளர்வுகள் வழங்குவது பற்றி மருத்துவ நிபுணர்களிடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக இன்று காலை அவர் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தின்போது மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும், அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழு உடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதற்கு முன்பாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய கள நிலவரங்களை கேட்டறிவார்.
கொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு
மருத்துவ நிபுணர் குழு
பல மாநிலங்களில் பல்வேறு தவறுகள் அளித்த போதிலும் மருத்துவ நிபுணர் குழுவின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் கெடுபிடி சற்று அதிகமாகவே இருக்கும். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்பதை, கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக அண்டை மாநிலங்களில், தியேட்டர்களை திறக்க அரசுகள் முடிவு செய்துள்ள போதிலும், தமிழக அரசு இதுவரை அந்த முடிவுக்கு வரவில்லை.
இன்று ஆலோசனை
இதனால்தான், இன்று மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனியும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டியது, பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது மட்டுமே பாக்கி.
தியேட்டர்கள் திறப்பு
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை பற்றி முதல்வர் பரிசீலிப்பார் என்று தெரிகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் நவம்பர் மாதம் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு பச்சைக்கொடி காட்டுமா, இதற்கு மருத்துவ நிபுணர்கள் குழு ஒப்புக் கொள்ளுமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரியவரும்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
இன்னொரு பக்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி இப்போது அரசு தரப்பில் இருந்து மாறி மாறி கருத்துக்கள் வருகின்றன. இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இன்றைய கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. அனேகமாக மருத்துவ நிபுணர்கள் குழு பள்ளி மற்றும் கல்லூரிகளை இப்போது திறக்கக் கூடாது என்றுதான் வலியுறுத்தும் என்கிறார்கள் அரசுத் துறை வட்டாரத்தில்.