விஜயகாந்த் முதல்வராகியிருந்தால்... அரிசி பருப்பு வீடு தேடி வந்திருக்கும்.. ஏங்கும் "செல்லம்"
சென்னை: விஜயகாந்த் முதல்வராகியிருந்தால் இந்த கொரோனா நெருக்கடியில் தமிழகத்தில் என்னென்ன நடந்திருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஏழை மக்கள் உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கொரோனாவை காட்டிலும் பசியால் ஏராளமானோர் இறக்கும் சூழல் இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
காய்கறிகள்
1. ஒவ்வொரு வீட்டிற்கும், 6 மாதத்திற்கான அரிசி, பருப்பு, ஆயில் ஆகியவற்றை நேரடியாக வழங்கியிருப்பார்.
2. காய்கறிகள், பழங்கள் வீணாவதை தடுக்க ஒவ்வொரு வீட்டின் பிரிட்ஜுகளில் நிரப்ப சொல்லியிருப்பார். பக்கத்து வீட்டிற்கு பகிர்ந்து கொடுக்க சொல்லியிருப்பார். வாரா வாரம் காய்கறிகள் அரசு வேன்களில் வீட்டுக் கதவை தட்டியிருக்கும். குப்பைக்கு செல்லாது.
3. முதல்வர் நிதியும் தானாக நிரம்பியிருக்கும்.
4. அரசு பள்ளிக் கட்டணம், அரசு கல்லூரி கட்டணம் போல் அதற்கு நிகராக தனியார் பள்ளி, கல்லூரி கட்டணத்தை 2020- 2021-இல் வசூலிக்க உத்தரவிட்டிருப்பார்.
5. சாதாரண நோய்க்கான மருத்துவமனைகள், கொரோனாவுக்கான தனி மருத்துவமனைகள் என தரம் பிரித்திருப்பார்.
குறைந்த ஊதியம்
6. கல்லூரி, என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், சமூக ஆர்வலர்களை குறைந்த ஊதியத்தில் பணியில் அமர்த்தியிருப்பார்.
7. தனியார் இளநிலை, முதுநிலை, மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் வீடு வீடாக வலம் வந்திருக்க செய்திருப்பார்.
8.. மக்கள் பொருள்கள் வாங்க குவிந்திருக்க வாய்ப்பில்லை.
9. வாடகை வீட்டில் குடியிருப்போரை கணக்கெடுத்து தகுதி அறிந்து மன உளைச்சலை தடுத்திருப்பார்.
10. கொரோனாவில் இறந்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருப்பார்.
என தனது அறிக்கையில் அந்த சங்கத்தின் தலைவர் செல்லப் பாண்டியன் செல்வம் தெரிவித்துள்ளார்.
வன்முறை
தமிழகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தனது திருமண மண்டபத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றிக் கொள்ளலாம் என அரசுக்கு அனுமதி கொடுத்தார். அது போல் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அடக்கம் செய்ய அனுமதி
இதையடுத்து அடுத்த நாளே கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். இத்தனை தயாளு குணம் கொண்ட விஜயகாந்த் மீது தமிழக மக்களுக்கு எப்போதுமே பாசம், பரிவும் அக்கறையும் உண்டு. அதன் எதிரொலிதான் மேற்கண்ட அறிக்கையாகும்.