தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. அப்புறம் கோடை புயல்.. வானிலை ஆய்வாளர் சொல்வதை பாருங்க
சென்னை: தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாகவே, நீலகிரி, கோவை, மைசூர் குடகு போன்ற பிராந்தியங்களில் மழை பெய்துள்ளது. எனவே, இந்த மழை படிப்படியாக கிழக்கு நோக்கி நகர்ந்து பெங்களூர், சேலம், வேலூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் பரவக்கூடும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதுகுறித்து, தனியார் வானிலை ஆய்வாளர், ஸ்ரீகாந்த், டிவி சேனலிடம், கூறியதை பாருங்கள்: நீலகிரி, கோவை பகுதியில் நேற்று மழை இருந்தது. இந்த வார இறுதியில் தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக, மழையை எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் பிற்பகுதியில், அதாவது 15ம் தேதிக்கு பிறகு, வெப்பச் சலனத்தால் ஏற்படக்கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
கீழைக் காற்றிலிருந்து, மேலை காற்றுக்கு மாறுவதற்கு ஒரு புயல் அல்லது சலனம் தேவைப்படும். பல ஆண்டுகளில் ஏப்ரல், மே மாதங்களில் ஒரு புயல் உருவாகும். போலவே அக்டோபர் மாதத்திலும் ஒரு புயல் உருவாகும்.
பருவமழை காலத்தை இந்த புயல்தான் மாற்றிவிடும். எனவே ஏப்ரல் இறுதி அல்லது மே துவக்கத்தில் ஒரு புயல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எங்கே உருவாகும் என்று இப்போதே, சொல்லமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் இப்போதுதான் துவங்கியுள்ள போதிலும் கூட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் பகல் நேரத்தில் புழுக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே கோடை மழை மற்றும் அதைத்தொடர்ந்து ஒரு புயல் காரணமாக மழை ஏற்பட்டால் அதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.
அதே நேரம் புயல் எங்கே உருவாகும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்பதும் இதில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.