ஒரு வாரத்தில் இரு பேரழிவு.. மீம்ஸ் போடுபவர்களே உஷார்!
Recommended Video
சென்னை: எத்தனை குழப்பம், எத்தனை மீம்ஸ்.. கடைசியில் அத்தனையும் ஒரு புரளியை நம்பித்தானா..?
சமீபகாலத்தில், தமிழகத்தை கலக்கிய ஒரு பெரிய புரளி என்பது, நாய்க்கறி தொடர்பானதாகத்தான் இருக்கும். எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ மதிப்புள்ள கெட்டுப்போன இறைச்சி கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கமான ஆட்டிறைச்சி போலன்றி நாய்க்கறி போல இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதால் ஆரம்பித்தது சர்ச்சை. அன்றைய தினமே சமூக வலைத்தளங்களில், நாய்க்கறி மீம்ஸ்கள்தான் பவ்.. பவ்.. என குரைத்தன.
குறி வைத்து தாக்குதல்
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒரு குரூப், மாமிச விற்பனை செய்யும் தொழிலில் உள்ளோரையும், அவர்கள் சார்ந்த மதத்தையும் குறி வைத்து மீம்களை வெளியிட்டனர். இந்த களேபரங்களால், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டன் சாப்பிட பயந்து போன சென்னை மக்கள், மீன், கோழிக்கு மாறினர். இதனால் மாமிச கடைகளில் பிசினஸ் டல்.
ஸ்மார்ட் போன் போதும்
சாலையோர சிறு ஹோட்டல்கள், தள்ளுவண்டி பிரியாணி கடைகளிலும் வியாபாரம் நொடிந்து போனது. வட்டிக்கு பணம் பெற்று, தொழில் நடத்தும் அவர்கள் நிலை பரிதாபமானது. அதிலும் குறிப்பாக வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் கிளம்பிய புரளி அவர்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டது. ஆய்வக முடிவு வரும் முன்பாக, அவரவர் நீதிபதியை போல தீர்ப்பை எழுத தொடங்கினர். இணையதள வசதியும், ஸ்மார்ட் போனும் இருந்தால் ஒரு புரளியை வைத்து சமூகத்தின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட முடியும் என்பதற்கு நாய்க்கறி புரளி சம கால உதாரணம்.
இறைச்சி ஆய்வறிக்கை
ஆனால், 5 நாட்களுக்கு பிறகு, 6வது நாளான இன்று, புரளிகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் சர்ச்சைக்குரிய இறைச்சி ஆய்வு முடிவு இன்று வெளியானது. அது ஆடு அல்லது செம்மறியாட்டு இனத்தை சேர்ந்த இறைச்சி என்பதை உறுதியாக கூறியுள்ளது அந்த ஆய்வு.
மீம்களின் தாக்கம்
இனியாவது இதுபோல அவசரப்பட்டு முடிவெடுத்து மீம் போட்டு அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்கும் முயற்சியில் யாரும் இருக்க கூடாது. பொறுத்திருந்து எதையும் செய்யலாமே.. மீம் கிரியேட்டர்களுக்கு சமீபகாலத்தில் இது 2வது அடி. கஜா புயலை கேலி செய்து மீம் போட்டுக்கொண்டிருந்தபோது, அது மிகப்பெரிய பேரழிவாக தாக்கி சென்றது. இந்த மீம்களின் தாக்கத்தில் இருந்த பிற மாவட்ட மக்களுக்கு இதுவரை கஜா புயலின் நாசக்கார வேலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது அறிவுக்கு எட்டவே இல்லை. காரணம், மீம்களின் தாக்கம். இதன்பிறகு, நாய்க்கறி மீம்சும் மாமிச தொழிலை நம்பியிருந்தோர் தொழிலை நசிவடைய செய்துவிட்டு, உண்மை ஏதுமின்றி, புஸ்சென்று போய்விட்டது. எதையும் நகைச்சுவையாக கடந்து செல்லும் மீம் போடும் மனநிலை, சமூகத்தில் எத்தகையை ஆபத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள்.