போலீஸ்காரர்கள் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய மாட்டோம்.. பால் முகவர்கள் சங்கம் தடாலடி
சென்னை: பால் விநியோகம் செய்யும் முகவர்களை மிரட்டுவது, கடைகளை மூடச்சொல்வது போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் வீடுகளுக்குப் பால் வினியோகம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளதாக, பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பால் விநியோகத்தில் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருவதாகவும், கொரோனா போன்ற காலத்திலும் மக்களுக்குப் பால் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தக்க பாதுகாப்புடன் அவர்கள் வேலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாத்தான்குளம் மரணம் அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும் - வைரமுத்து
இடையூறு கூடாது
அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதால், பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என்று அறிவித்துள்ள நிலையில், பால் விநியோகத்தில் ஈடுபடும் பால் முகவர்களை வேலை செய்யவிடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வதாகவும், பால் விநியோக மையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனப் பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தீர்வு இல்லை
இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருப்பதால், நாளை முதல் காவல்துறையினர், வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசரமாக முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வணிகர்கள்
சாத்தான்குளத்தில் கூடுதல் நேரம் கடை திறந்ததற்காகக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் இறந்ததாக குற்றம்சாட்டி வணிகர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்த நிலைியல், பால்முகவர்களும், போலீசாரின் கெடுபிடிகளுக்கு எதிராக இணைந்துள்ளனர்.
பால் முகவர்கள்
இருப்பினும், பால் முகவர்கள் முடிவு தொடர்பாக விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. ஒரு சில போலீசாரின் செயல்களுக்கு, மொத்த போலீசாருக்கு எதிராகவும் செயல்படுவது சரி கிடையாது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுவதை பார்க்க முடிகிறது.