எல்.முருகன் எழுப்பிய 2 கேள்வி.. சுடச்சுட பதிலடி கொடுத்த மா.சுப்பிரமணியன்.. அப்படியே திகைத்துபோன பாஜக
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த கொரோனா தொற்றை கட்டுப்படுவதற்காக தமிழக அரசு மின்னல் வேகத்தில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 36,000-ஐ கடந்து சென்ற நிலையில் தற்போது 15,000-க்குள் அடங்கி விட்டது.
போர்க்கால நடவடிக்கை
திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அரசு மருத்துவமனைகள் முன்பு நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றன. இதன் பின்னர் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசு ஆக்சிஜன் தவிர, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வந்து தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைகள்
மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக தடுப்பூசிகள் கேட்டு வாங்கி தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டன. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது. கொரோனா குறைந்து விட்டதால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எல்.முருகன் குற்றச்சாட்டு
பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பாஜக இன்று போராட்டம் நடத்தியது. அப்போது '' டாஸ்மாக் கடை திறப்பதில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடும், தற்போது ஒரு நிலைப்பாடும் என்று திமுக இரட்டை வேடம் போடுகிறது. டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது'' என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
மா.சுப்பிரமணியன் அதிரடி பதில்
முன்னதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்கள், இணை நோய்களால் இறந்து விட்டதாக கூறி அவருக்கு இழப்பீடு வழங்காத சூழ்நிலை நிலவுகிறது. அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று எல்.முருகன் கூறி இருந்தார். எல்.முருகனின் இந்த 2 கேள்விகளுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
முருகனுக்கு கண்டனம்
இது தொடர்பாக நிருபர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும்போது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது தொற்று மிகுதியாக குறைந்த பின்பே மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி பாஜக தலைவர் எல்.முருகன் போராட்டம் நடத்த வேண்டியதுதானே.
மத்திய அரசிடம் கேளுங்கள்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமே மத்திய அரசும், மாநில அரசும் கொரோனா நிவாரண நிதி வழங்குகின்றன. கொரோனாவால் இறந்த அனைவருக்கும் நிவாரண நிதியை மத்திய அரசும் கொடுக்கவில்லை. மாநில அரசும் கொடுக்கவில்லை. கொரோனாவால் இறந்த அனைவருக்கும் மத்திய அரசு நிவராணம் வழங்குகிறதா? என்பதை மத்திய அரசிடமே கேட்டு எல்.முருகன் தெளிவு பெற வேண்டும். எல்.முருகனுக்கு உண்மையிலேயே தமிழ்நாடு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.