அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.. படிப்படியான நடவடிக்கை எடுக்கிறோம் - அமைச்சர் சேகர் பாபு
சென்னை: அனைத்து சாதியினரும் படிப்படியாக கோயில்களில் அர்ச்சகர்களாக பணியமர்த்தப்படுவர் என இந்து சமய மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பழமையான டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடல் அதி நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டது.
செயற்கை புல்வெளி மற்றும் மின் ஒளியுடன் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த விளையாட்டு திடலை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி நிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
பப்ளிக் டாய்லெட்டுக்கு போய்ட்டு தண்ணீ ஊத்தாம வர்றீங்களா.. இனி அவசியமே இல்லை.. வந்தது புது டெக்னிக்!
அர்ச்சகர் ஆகலாம்
பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டத்தில் தி.மு.க நிலையாக உள்ளது. இந்த திட்டத்தில் பங்குபெற முறையான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. அரசு நடத்தும் பயிற்சி கூடங்களில் முறையாக பயின்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் படிப்படியாக கோயில்களில் பணி அமர்த்தப்படுவார்கள்.
கடும் நடவடிக்கை
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த கட்சியினர் ஆக இருந்தாலும்,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்படும். கடந்த சில நாட்களில் 600 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 80 இடங்களில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தயாநிதி மாறன் பேட்டி
இதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது:- திமுக ஆட்சியில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பட்டு வருகிறது. தற்போது ரூ.70 லட்சம் செலவில் இந்த அம்பேத்கர் விளையாட்டு திடல் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் யாரும் தற்போதுவரை பதக்கம் வெல்லாதது பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.
பிற விளையாட்டுகளில்...
தமிழகத்தில் கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டுகளை விளையாட சரியாக ஊக்கப்படுத்தவில்லை. வருங்காலத்தில் மற்ற விளையாட்டுகளிலும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். ஒன்றிய அரசு தற்போது மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பில்ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்திருப்பது திமுக தலைவர் ஸ்டாலினின் தொடர் வலியுறுத்தல் காரணமாக நடந்தது. தானாக மனம்வந்து ஒபிசி பிரிவினருக்கு 27 % இட ஒதுக்கீட்டை மோடி அரசு வழங்கவில்லை.
அண்ணாமலைக்கு கண்டனம்
தற்போது வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு பா.ஜ,க.தான் காரணம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அவர் கூறுவது ''காக்கா உக்கார பனம்பழம் விழுந்தது போல'' இருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பா.ஜ.க.வில் கூட்டணியில் இருந்தும் எதையும் சாதிக்கவில்லை. அண்ணாமலை நீட்டுக்கு ஆதரவானவர். மேகதாது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.
போராட்டம் நடத்த முடியுமா?
அண்ணாமலை கர்நாடகாவில் இருந்து வந்தவர் தானே அங்கே சென்று போராட்டம் நடத்த முடியுமா? கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிதான் நடைபெறுகிறது. உண்மையாக தமிழ் மக்கள் மீது பற்று இருந்தால் கர்நாடக அரசுடன் பேசி மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டியது தானே. பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதை திமுக வன்மையாக எதிர்க்கிறது. அதனை கட்டாயமாக அமல்படுத்த விட மாட்டோம். தயாநிதி மாறன் கூறினார்.