தீப்பொறி கிளப்பிய 75 நாள்.. காமராஜரே வந்தும் கூட கைவிடாத தீரம்.. அதனால்தான் அவர் சங்கரலிங்கனார்!
தமிழ்நாடு பெயர் சூட்ட காரணமாக இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார்
சென்னை: "தமிழ்நாடு நாள்" இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, இன்று அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டு வருவது உள்ளூர மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் இந்த மகிழ்ச்சிக்கு பின்னால் மறைந்திருக்கும் ஒரு வலியை நாம் நினைவு கூரவேண்டி உள்ளது.. ஒரு தியாகத்தின் அர்த்தத்தை வணங்க வேண்டி உள்ளது.. அவர்தான் தியாகி சங்கரலிங்கனார்!
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களை பிரிக்கப்பட, 1956-ம் ஆண்டு "மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட கொதித்தெழுந்தார் சங்கரலிங்கனார்.
"பசியாவது, சாப்பாடாவது... "தமிழ் கூறும் நல்லுலகம் இது... 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று வலியுறுத்தி உண்ணவிரதம் இருக்க ஆரம்பித்தார் சங்கரலிங்கனார்.
#தமிழ்நாடு நாள் : தாய்நிலம் காக்க தமிழகம் நடத்திய வீரம்செறிந்த போராட்டங்கள்-கே.எஸ். ராதாகிருஷ்ணன்
உண்ணாவிரதம்
ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. மொத்தமாக 75 நாள். 'தமிழ்நாடு' என்று பெயரை வைத்தே ஆக வேண்டும் என்று சொல்லி 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.
துண்டு பிரசுரங்கள்
இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. தினசெய்திகளை தேடி வந்து மக்கள் வாங்கி படித்தார்கள்.. துண்டு பிரசுரங்கள் எங்காவது கண்ணில் பட்டால்கூட ஓடிச்சென்று எடுத்து படிப்பார்கள்.. அந்த அளவுக்கு இவரது உண்ணாவிரதம் உலுக்கி எடுத்தது!
வேண்டுகோள்
ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே உண்ணாவிரதம் உட்கார்ந்து கொண்டார் சங்கரலிங்கனார். நாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வருகிறார்கள், "இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தார்கள். கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கனார்.
உடல்நிலை மோசம்
நாட்கள் கடக்க ஆரம்பித்தன... உடல்நிலை அவருக்கு மோசமாக ஆரம்பித்தது.. பேரறிஞர் அண்ணா ஓடிச்சென்று நேரில் பார்த்தார். சங்கரலிங்கனார் அவரிடம் மனமுருக சொன்னார் "அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? " என்றார்.
கொள்கை பிடிப்பு
கடைசியில் 76-வது நாள்.. சங்கரலிங்கனாரின் உடல்நிலை அளவுக்கு அதிகமாக மோசமாகி விட்டது.. ஆஸ்பத்திரிக்கு சங்கரலிங்கத்தை தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். கடைசிவரை கொள்கை பிடிப்பும், உறுதியும் கொண்டு இந்த உண்ணாவிரதத்தை கடைப்பிடித்த சங்கரலிங்கனாரின் வயதோ 78. சாகும்வரை உண்ணாவிரதம் என்பார்களே.. அது சத்தியமாக இதுதான்!
சலசலப்புகள்
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு' கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டுவரப்பட்ட போதெல்லாம் அது ஒவ்வொரு முறையும் அது தள்ளுபடிதான் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழக அரசு' என்று மாற்றியது.
சட்ட முன்வடிவு
அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தனிமனித ஒழுக்கம்
50 ஆண்டுகள் முழுமையாக முடிந்த நிலையில், இந்த தமிழ்நாடு என்ற பெயரை நாள்தோறும் உச்சரிப்பவர்களில் எத்தனை பேர் சங்கரலிங்கனாரை நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் தனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடையவர் யாராக இருந்தாலும் அவரது பெயர் காலத்துக்கும் நிலைக்கும் என்பதற்கு சங்கரலிங்கனார் ஒரு சிறந்த உதாரணம்!!