வேறு வழியே இல்லை.. இதுதான் முக்கிய கட்டம்.. தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு மிக அவசியம்
சென்னை: வேறு வழியே இல்லை.. ஜூலை 31ம் தேதிக்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் முழு அளவில் தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தினால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி விடலாம், என்கிறார்கள் மருத்துவர்கள்.
இரண்டு வாரங்கள் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு அங்கு வைரஸ் பரவல் என்பது கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேல் தினமும் கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் தற்போது சென்னையில் 1,200 அல்லது 1,300 என்பதை மிகாமல் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.
முழு ஊரடங்கு உத்தரவு, முக்கியமான ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்பு
பிற மாவட்டங்கள்
ஆனால் தொடர்ந்து 12வது நாளாக சென்னை தவிர்த்த பிற மாநிலங்களில் தினமும் பதிவாக கூடிய கொரோனவைரஸ் கேஸ் எண்ணிக்கை என்பது 3,000 என்ற அளவை விட அதிகமாக இருக்கிறது. அதாவது, சென்னையை விடவும், சுமார் 3 மடங்கு அதிக பாதிப்பை பிற மாவட்டங்கள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. சென்னையை ஒப்பிட்டால் நூற்றில் ஒரு பங்குகூட மருத்துவ கட்டமைப்பு இல்லாத பிற மாவட்டங்களில், இவ்வாறு வைரஸ் பரவுவது என்பது மிகவும் ஆபத்தானது.
போக்குவரத்து தடை முக்கியம்
சென்னையை பொறுத்த அளவில், மக்கள் தொகை நெருக்கம் உள்ள பகுதி. எனவே அதிகம் போக்குவரத்து இல்லை என்றால் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பிற மாவட்டங்கள் அப்படி கிடையாது. அங்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட பிற போக்குவரத்தை நிறுத்தி விட்டாலே, வைரஸ் பரவல் என்பது குறைந்து விடும். இந்த வைரஸ் சுமார் 14 நாட்கள் வீரியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இரண்டு வாரங்கள் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தப்பட்டால், போக்குவரத்து தடைபட்டு கிராமப்புறங்கள் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வைரஸ் பரவல் என்பது தடைபடும்.
தென் மாவட்டங்கள் நிலவரம்
உதாரணத்துக்கு நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி போன்றவை சிறிய டவுன்கள்தான். ஆனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 50 முதல் 60 கிராமங்களுக்கு இவை சந்தை நகரமாக செயல்படுகின்றன. எனவே இங்கு இப்பொழுது வைரஸ் பரவி இருப்பது சுற்று வட்டார கிராமங்களுக்கு அவற்றை பரப்புகிறது. இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் பல வைரஸ் கிளஸ்டர்களை நாம் உதாரணமாக குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
மருத்துவ வசதிகள்
முழு ஊரடங்கு அறிவித்து, கடைகள் திறப்பது, பிற போக்குவரத்தை தடை செய்யும்போது மட்டுமே இந்த பரவலை கட்டுப்படுத்த முடியும். கிராமங்களில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை, அவ்வாறு விழிப்புணர்வு இருந்தாலும் அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி கிடையாது. எனவே மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத அந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுவதை, தவிர்க்க வேண்டுமானால் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம்.
தடுப்பூசி
ஏற்கனவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, ரஷ்யாவின் தடுப்பூசி போன்றவை அடுத்தடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவில் அவை புழக்கத்துக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசியும் மனித டிரையல் கட்டத்தில் உள்ளது. அடுத்து அதுவும், புழக்கத்துக்கு வரலாம். அதுவரை நாம் சமாளித்து விட்டால் போதும். இதற்கு இந்த ஊரடங்கு உத்தரவு அவசியம். வைரஸின் வீரியத்தை கட்டுப்படுத்துவதற்கு, இந்த முழு ஊரடங்குதான், மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுநர்கள்.