அந்த நிலை இனி ஒரு காலமும் உருவாகிடக் கூடாது... அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: மழை வெள்ள மீட்பு பணிகளில் அலட்சியம் நீடித்தால் 2015-ம் ஆண்டு செயற்கை பெருவெள்ளம் ஏற்பட்டதை போன்ற அவலநிலை மீண்டும் உருவாகிடும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்து போன நிகழ்வு தம் நெஞ்சத்தை உலுக்குவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்களே கவனம்.. ஊரகப் பகுதிகளில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதி
வெள்ளம் சூழ்ந்தது
வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக, உரிய பருவத்தில் பெய்யக்கூடிய மழை இது என்பதால், அதனை உணர்ந்து முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக உருக்குலைந்து கிடப்பதால், இந்தப் பருவ மழைக்கே கடலூர் உள்பட பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
விளைநிலங்கள் மூழ்கின
கடலூரில் 3000த்துக்கும் அதிகமான வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கடும் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். அதுபோலவே, விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
செயற்கை பெருவெள்ளம்
அனைத்துத் தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். கவனக்குறைவும் அலட்சியமும் நீடித்தால், 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட செயற்கைப் பெருவெள்ளத்தைப் போன்ற சூழலைத் தமிழகம் சந்திக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும். அந்த நிலை இனி ஒருக்காலத்திலும் உருவாகிவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
வலியுறுத்தல்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.