மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்.. இனிதான் ஆட்டமே!
Recommended Video
சென்னை: இந்த லோக்சபா தேர்தலில் நாம் சாதாரண எம்பிக்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. நாடாளுமன்ற புலிகளை உருவாக்கி அனுப்பியுள்ளோம் என்று சட்டை காலரை தூக்கி விட்டு பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் தமிழர்கள்.
உண்மைதான்.. இதுவரை இல்லாத அளவுக்கு சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் ஒருசேர லோக்சபாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் தமிழக வாக்காளப் பெருமக்கள்.
பணப்பட்டுவாடா, கவர்ச்சி அறிவிப்புகள், இப்படி எத்தனை எத்தனையோ இருந்தும் கூட, சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் மதித்து அவர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ள தமிழக மக்களின் அறிவுத் திறமை மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!
வெங்கடேசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கிய வெங்கடேசன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். காவல் கோட்டம் என்ற தனது முதலாவது நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர். கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர் தொன்மை நாகரிக வழிபடுவதற்கு எதிராக பெரும் சதி நடப்பதாக பிரச்சாரம் செய்து இதை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். தமிழர் நாகரிகம் தொடர்பாக ஆதாரங்கள் திரட்டி வைத்திருப்பவர். தமிழரின் பெருமையை இந்தியா முழுக்க எதிரொலிக்க இவர் நாடாளுமன்றத்தை சிறந்த மேடையாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை விட 1.39 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார்.
ரவிக்குமார்
திமுக கூட்டணியில் அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவிக்குமார். இவரும் பிரபல எழுத்தாளர். மாலை நிலவரப்படி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். மணற்கேணி என்னும் ஆய்வு இதழை நடத்தி வருகிறார். தலித் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக எழுதி வருபவர். எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இவர் குரல், லோக்சபாவில் ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜோதிமணி
கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையைவிட, இரண்டரை லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வென்றுள்ளார். இவர் சித்திரக் கூடு உள்ளிட்ட சில நாவல்களை எழுதியவர். மேலும் காவிரி மணல் கொள்ளை விவகாரத்தில் தீவிரமாக பல போராட்டங்களை துணிச்சலாக முன்னெடுத்தவர். இவரது சமூக அக்கறை லோக்சபாவில் பீரங்கி பேச்சாக எதிரொலிக்கும் என்று நம்பலாம்.
தமிழச்சி தங்கபாண்டியன்
சென்னை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் மற்றும் சிட்டிங் எம்பியான ஜெயவர்த்தனவிடவும் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். வேறு பகுதியிலிருந்து சென்னையில் வந்து போட்டியிடுகிறார் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டவர். அதையெல்லாம் முறியடித்து அமைச்சர் ஜெயக்குமாரின் மகனையே தோற்கடித்துள்ளார். சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்த தமிழச்சி தங்கபாண்டியன், பல்வேறு கவிதை கட்டுரைகளை எழுதியவர். தமிழ் ஆர்வம் மிக்கவர். பெண்ணியம் பேசக்கூடியவர்.
செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
கனிமொழி
இந்த வரிசையில் முக்கியமான மற்றொரு எழுத்தாளர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி. தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக கவிஞர் என்ற அடைமொழியுடன் வலம் வந்தவர். சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி கருணாநிதியையே மகிழ்வித்தவர். தமிழரின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
ராஜ்யசபாவில் ஆவேசம்
ராஜ்யசபாவில், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து கடுமையாக உரையாற்றியவர். அதை தடுத்து விட, மிகவும் முயற்சி செய்தவர். இருமுறை, ராஜ்யசபா எம்பியாக இருந்த அவர், தற்போது முதல் முறையாக லோக்சபாவில் காலடி எடுத்து வைக்க உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியது போல, நாடாளுமன்ற புலியாக இப்போது லோக்சபாவில் அவர் உறுமல் சத்தம் எதிரொலிக்கும் என்று திமுகவினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
திருமாவளவன்
இதேபோல ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய திருமாவளவனும் சிதம்பரம் தொகுதியில் வெற்றி முகத்தில் உள்ளார். ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், மாலை நேர நிலவரப்படி அவர் கணிசமான வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை முந்தியுள்ளார். ஒருவேளை அவரும் நல்ல முன்னிலை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டால், எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான திருமாவளவன், தமிழக பிரச்சனைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், பிரச்சினைகள் குறித்து பேசி, லோக்சபாவில் கவனத்தை ஈர்ப்பார். இத்தனை அறிவார்ந்த பிரதிநிதிகளை ஆளும் கட்சி எவ்வாறு சமாளிக்கப் போகிறது? இவர்களின் கேள்விக்கணைகளை பாஜக கூட்டணி அமைச்சர்கள் எதிர்கொள்ள முடியாமல் எப்படி திணறப்போகிறார்கள்? என்பதை பார்ப்பதற்கு தமிழகம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது!